Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஜனவரி 11, 2024 06:29

சென்னை: அதிமுக கட்சி பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுகவிலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ்-க்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து நவம்பர் 7ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் விசாரித்து, நவம்பர் 16ஆம் தேதி தீர்ப்புக்காக தள்ளிவைத்திருந்தனர்.

 இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தடையை நீக்கக் கோரிய பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் உரிய நிவாரணம் பெறும்வகையில் தனி நீதிபதியை அணுகும்படியும், அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்